Showing posts with label மொழிக்கலப்பு. Show all posts
Showing posts with label மொழிக்கலப்பு. Show all posts

Thursday, February 07, 2013

கற்றது தமிழ்-5

(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்)

தமிழென நினைத்து  பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,பிறமொழிச் சொற்களைப் நாம் பயன்படுத்தி வருகின்றோம்,அவற்றில் பல தமிழாகவே மாறிவிட்ட சூழலில் அச்சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது மிகவும் கடினமாகும்,அதே வேளையில் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களும் உள்ளன,அவற்றை  அடையாளங்காணும் சிறு முயற்சியே இத்தொடர்.

இப்பதிவில் நாம் அதிகம் பயன்ப்படுத்தும் மேலும் சில வடமொழி ,பிறமொழி சொற்களையும்,அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் காணலாம்.

#அகதி:

ஒரு சொல்லின் முன் "அ" சேர்ப்பதால் எதிர் மறை பொருளை உருவாக்கலாம், இம்முறை வடமொழி,தமிழ் என இரண்டிலும் நடைமுறையில் உள்ளது.

கதி(gati) என்ற வடமொழிச் சொல்லுக்கு ,

நிலை,
இடம்,
இலக்கு,
நுழைவு,
சரணடைதல்,
புகலிடம்,
நேரம்,
வேகம்,
இயக்கம்,
நகர்தல்.

என்றெல்லாம் பொருள் உண்டு.

சொல்லுக்கு முன் "அ"  சேர்த்தால் இவற்றிற்கு எதிரான பொருள் கொண்ட சொற்களை உருவாக்கலாம்.

அகதி என்ற சொல்லினை கொண்டு ,
யாருமற்றவன்,வறியவன்,நாடோடி,பற்றில்லாமல்,புகலிடம் இல்லாமல் இருப்பவர்களையும் குறிக்கலாம்.

மேலும் அகதி என்பதற்கு  திரும்புதல் என்று ஒரு பொருளும் இருப்பதால்,புலம் திரும்பியவர் என்றும் சொல்லலாம்.

அகதி என்பதற்கு தமிழ் இணைச்சொற்கள்: நாடோடி ,நாடற்றவர் ,புலம் திரும்பியோர் என்பதை கொள்ளலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் என்பது பொதுவாக 'migrated" என்பதையே குறிக்கும்.

#அகாலம்- 

காலம் என்ற வடமொழிச்சொல்லுக்கு நேரம் என்று பொருள், எதிர்மறையாக "அகாலம்" என்கிறார்கள்  இதற்கு இணையான தமிழ்ச்சொல் "நேரமற்ற நேரம்",வேளையற்ற வேளையில் எனலாம்.

அகாலநேரம் என்பது ,நடு சென்டர் என்பது போல இருமுறை நேரத்தினை சொல்வது.

#அங்குலம் : 

வட மொழிச்சொல், அங்குஷ்டம் என்றால் வட மொழியில் கட்டைவிரல் , ,எனவே ஒரு கட்டைவிரல் தடிமன் உள்ள அளவை அங்குலம் என்பார்கள்.
இணையான தமிழ்ச்சொல்: விரற்கடை அளவு.

#அஜாக்கிரதை

ஜாக்கிரதை என்ற வட மொழிச்சொல்லின் எதிர்ச்சொல்,

இணையான தமிழ்ச்சொல் : கவனமின்மை,விழிப்பின்மை.

# அசுத்தம்-

சுத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்,

இணையான தமிழ்ச்சொல்: அழுக்கு,தூய்மையின்மை.

#அநியாயம்:

நியாயம் என்ற வடச்சொல்லின் எதிர்ப்பதம்.

இணையான தமிழ்ச்சொல்:முறையின்மை,நடுவின்மை.

#அபத்தம்:

பத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்.

பத்தம் என்றால் நேர்மை, உண்மை, எனப்பொருள். சுத்தபத்தமாக கடவுளை வணங்க வேண்டும் என்றால் ,தூய்மையாக ,நேர்மையாக ஒன்றி வணங்குதலை குறிக்கும்.

இணையான தமிழ்ச்சொல்: பொய்,தவறு.

#இலவசம்:

labhasa என்ற வட மொழி சொல்லுக்கு , பிச்சையாக, தானமாக கேட்டுப்பெறுதல் என்ற பொருள் ஆகும்.  தமிழில் அனைத்து மெய்யெழுத்துக்களையும் சொல்லின் முதல் எழுத்தாக பயன்ப்படுத்தக்கூடாது என்பதால், உயிர் எழுத்து "இ" சேர்த்து இலவசம் என முழுமையாக தமிழில் எழுதப்படுகிறது.

உ.ம்: லட்சுமணன் = இலட்சுமணன், ராமன் = இராமன்.

தமிழில் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ,பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களும் வரலாம், அதுவல்லாமல், மெய் எழுத்துக்களில் ,க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங ஆகிய பத்து மெய்யெழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரலாம்.

இலவசம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்:விலையின்மை,விலையில்லா என்பதாகும்.

ஹி...ஹி முந்தைய முத்தமிழ் வித்தவர் ஆட்சியில் கொடுத்த இலவசப்பொருட்களை இப்பொழுது விலையில்லா பொருட்கள் என சொல்கிறார்கள். சரியாத்தான் மாற்று சொல் கண்டுப்பிடித்து இருக்காங்க :-))

# கோயில் அல்லது கோவில்:

பலரும் ஆலயத்தினை கோயில் அல்லது கோவில் என எழுதி,பேசி வருவதுண்டு, இரண்டில் எது சரியான தமிழ்ச்சொல் என குழப்பம் வருவது இயல்பே.

தமிழ் இலக்கண புணர்ச்சி விதிகளின் படி, நிலை மொழி இறுதியிலும்,வரு மொழி முதலிலும் உயிர் எழுத்து இருக்குமானால் , இரு சொற்கள் இணையும் போது ஒற்றெழுத்து மிகும், என்கிறது, இதனை உடம்படுமெய் - உடன் படுத்தும் - இணைக்கும் மெய் எழுத்து என்கிறார்கள்.

மேலும் நன்னூல் இலக்கணப்படி,

இ,ஈ,ஐ ஆகிய உயிர் எழுத்துக்கள் இருப்பின் யகர ஒற்று "ய்"மிகும்.

ஏனைய உயிர் எழுத்துக்கள் இருப்பின் "வகர" மெய் "வ்" மிகும்

ஏ எனும் உயிர் எழுத்து இருப்பின் இவ்விரு மெய்யும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

கோவில் = கோ +வ்+இல்

கோ என்ற சொல்லில் "ஓ"எனும் உயிர் எழுத்து ஒலிக்கிறது அதற்கு வகர மெய்"வ்" உடம்படுமெய் ஆக மிகலாம்.

எனவே கோவில் என்பதே சரியானது.

கோயில் =கோ+ய்+இல்

எனப்பிரித்தால் யகர ஒற்று "ய்" மிகுவதை காணலாம், இது உடம்படுமெய் என்ற விதிப்படி சரி,ஆனால் நன்னூல் விதிப்படி தவறு என்கிறார்கள்.

அதே சமயத்தில் இலக்கியங்களில் கோயில் என்ற சொல்லும் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது,எனவே நடைமுறையில் கோயில் என்று சொல்வதும் பிழையில்லை.


மேலும் சில ஒலி ஓசையில் ஒத்து குழப்பும் சொற்கள்.

முருக்கு- முறுக்கு:

முருக்கு என்றால் அழித்தல்.

முறுக்கு என்றால் திரித்தல் , வீட்டில் சுடுவது முறுக்கு,  ஒரு வேளை வீட்டில் சுட்ட முறுக்கு உங்கள் பல்லை அழிக்குமானால் அதனை "முருக்கு" எனலாம் :-))

ஆனால் முருங்கை மரம் என்பதற்கு "ரு" தான் பயன்ப்படுத்த வேண்டும்.

#ஒரு-ஒறு:

ஒரு என்பது எண்ணிக்கை ஒன்றை குறிக்கும்.

ஒரு ரூபாய், ஒருவன்,ஒருவள்.

ஒறு என்பது தண்டனையை குறிக்கும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

என்ற குறளில் வரும் ஒறுத்தல் "தண்டிப்பதையே" குறிப்பதை காணலாம்.

#முன்னாள்-முன்னால்-முந்நாள்

இன்றைய நாள் - இன்னாள், அதற்கு முன்னர் வந்த நாள் முன்னாள்,அல்லது முந்தைய காலம்.

ex.minister என சொல்ல முன்னாள் ,முன்னால் என எதனை பயன்ப்படுத்துவது எனக் குழப்பம் வரும்.

முன்னால் அமைச்சர்  என்றால் இந்த ஆட்சிக்காலத்துக்கு முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அல்லது இப்போதைய அமைச்சருக்கு முன்னர் அமைச்சராக இருந்தவரை மட்டுமே குறிக்கும்.
முன்னால் என்றால் in front of, previous என்ற பதம் இங்கு நாள் கணக்கில் வராது.ஒரு வரிசைக்கிரமத்தில் சொல்வதாகும்.

உ.ம்.
#முன்னால் நிற்கும் பேருந்தில் ஏறவும்.

#முன்னால் நிற்கிறேன்.

அதையே முன்னாள் நிற்கிறேன் என்றால் முதல் நாள் நிக்கிறேன் ஒரு வேளை முதல் நாளில் இருந்து நின்றால் அப்படி சொல்லலாமோ :-))

ஆனால் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்து இப்போ பதவியில் இல்லை என்றால் என்ன செய்வது, எனவே முன்னாள் அமைச்சர் என எழுதுவதே சரியானது.

முந்நாள் என சொல்வது மூன்று +நாள் என சொல்வதாகும்,

மூன்று நாள் =முந்நாள்.

# அல்லு-அள்ளு:

அல் - துன்பம்,தீமை,இரவு,இருள்.

அல்ல- இல்லை

அல்லல் ,அல்லவை,

சிலர் அல்லும் பகலும் வெறும்* தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை என்பார்.

இங்கு அல் என்பது இரவை குறிக்கிறது.

*வெரும்- வெருப்பு- அச்சம்,பயம்,மிரட்சி.கோவம்,சினம் எனவும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம்.

வெறும் - வெற்று-வெற்றிடம்- ஒன்றுமில்லாமல்.

வெறுப்பு- dislike -hate,பகைமை, விருப்பமின்மை.

அள்ளு- அள்ளுதல், ஒன்றை அப்படியே வாரி எடுப்பது. மண் அள்ளுதல், தானியம் அள்ளுதல்.

ஹி...ஹி தெலுகுல அல்லுனா மாப்பிள்ளை என்கிறார்கள்(தெலுகு தெரிந்தவர்கள் சரியானு சொல்லுங்க), "அல்லுடு மஜாக்கானு"சிரஞ்சீவி ஒரு படம் கூட நடித்துள்ளார், ஒரு வேளை மாப்பிள்ளைகள் மாமனாரை வரதட்சணை,சீர் எனக்கேட்டு துன்புறுத்துவதால் மாப்பிள்ளையை "அல்லு"னு சொல்லுறாங்களா?

உதித்நாரயணன் போன்று மூக்கால் பாடுபவர்களுக்கு  எல்லாமே அல்லு அல்லு ...தல்லு ...தல்லு தான் :-))

#ஆனி-ஆணி:

ஆனி என்பது தமிழ்நாட்காட்டியில் உள்ள தமிழ் மாதமாகும்.

ஆணி என்பது வடிவேலு சொல்லும் "ஆணியே புடுங்க வேண்டாம்' இரும்பு ஆணி :-))

ஆணி என்ற சொல்லுக்கு இரும்பு ஆணி, வலிமை, இன்றியமையாத(முக்கியமான) என்ற பொருள்கள் உண்டு.

மரத்தின் ஆணி வேர்.

ஆணித்தரமாக கருத்தினை *கூறுதல்.

ஆணி என்பதற்கு இங்கு அழுத்தமாக ,வலிமையாக கருத்தினை சொன்னதாக பொருள்.

கூரு- கூர்- sharpness,கூரு கெட்டவன் என்றால் மொக்கையான மூளைத்திறன் உள்ளவர்னு சொல்றாங்க போல.

*கூறு,கூறல் - சொல்,சொல்லுதல்.

 ஒலிக்குறிப்பில் குழப்பும் மற்ற சொற்களை பிறகு பார்க்கலாம்.



மேலும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.

#அதிகம், வடமொழி , தமிழ் -மிகுதி,கூடுதல்.

#அதிசயம், வடமொழி, தமிழ் -புதுமை,வியப்பு.

#அஸ்திபாரம்:கடைக்கால்

#அலுவா- கோதுமை தேம்பாகு.

#அவகாசம்-ஒழிவு,ஓய்வு.

#அவசரம்-விரைவு, பரபரப்பு,பதைப்பு.

#அவசியம்- முதன்மை,கட்டாயம்,இன்றியமையாத

#ஆதிக்கம்-உரிமை,முதன்மை,மேன்மை,தலைமை.

#இதம்,ஹிதம்- இனிமை,நன்மை,அன்பு,அறம்.

#இருதயம்,ஹிருதயம்-நெஞ்சம்,அன்பு,உள்ளம்.

#கட்சி-பக்கம்,சார்பு.

#எதார்த்தம்-உண்மை,உறுதி

# கஷ்டம்- வருத்தம்,துன்பம்

#நிசி -இரவு

#தாமசம்,தாமதம்-தாழ்த்துதல்,அட்டி,மயல்.

#துரிதம்-விரைவு

#நிர்ப்பந்தம்-தொல்லை,நெருக்கடி,வலுக்கட்டாயம்,இடர்.

#நிரூபித்தல்- மெய்ப்பித்தல்,நிலைப்பெறுத்தல்.

# வாந்தி பேதி,- கக்கல்,கழிசல்
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,தமிழ் ஆட்சி சொல்லகராதி, தமிழ் அகரமுதலி,http://spokensanskrit.de/,கூகிள்,விக்கி, இணைய தளங்கள்,நன்றி!


Sunday, September 16, 2012

கற்றது தமிழ்-3


ஆலோசனை(aalochaya)

வட மொழி சொல், consider, advise,counsel எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

அறிவுரைத்தல்,அறிவுறுத்தல்,எடுத்துரைத்தல்,

ஆச்சர்யம்(aashcharyam)

வடமொழி சொல், -surprise எனப்பொருள்,

இணையான தமிழ்ச்சொல்:

வியப்பு,திகைப்பு,

அபிப்பிராயம்(abhipraaya)

வடமொழிச்சொல், -opinion எனப்பொருள் வரும்,

இணையான தமிழ்ச்சொல்:

கருத்து, கூற்று,கணிப்பு,

அலங்காரம்.

alangkar -alankrita- என வடமொழிச்சொல்லில் இருந்து உருவானது ,decorated எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

ஒப்பனை,அழகூட்டிய,

மேக்-அப்: ஒப்பனை, அழகுக்கலை ,

அலட்சியம்(alakshmaana)


வடமொழி சொல், disregard எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

கவனமின்மை, கவனியாமை,பொருட்படுத்தாமை, பொருட்டில்லை,புறந்தள்ளல்.

அல்பம்(alpam)

வடமொழிச்சொல் ,small எனப்பொருள்.

இணையான தமிழ் சொல்:

சிறிய, குறைவான, அல்பாக நடந்துக்கொள்வது என்றால் சின்னத்தனமா, வடிவேல் பாஷையில் சொன்னால் "சின்னப்புள்ளத்தனமா" :-))

தகுதிக்கு குறைவாக , கீழ்த்தரமாக நடந்துக்கொள்வது என சொல்லலாம்.

அங்கம்(angam)

வட மொழிச்சொல், body எனப்பொருள்:

இணையான தமிழ்ச்சொல்:

உடல்,உறுப்பு,அவயம், பகுதி,

அங்கன் என்றால் கவனிப்பு என்றும் பொருள் உண்டு, அங்கன்வாடி என வடமொழியில் சிறார் பள்ளியை சொல்லக்காரணம், குழந்தைகள் கண்காணிப்பகம்,காப்பகம் என்ற பொருளில் தான்.

அங்காடி என்ற சொல்லுக்கு திறந்த வெளியில் வியாபாரம் செய்வதே பின்னர் பொதுவாக கட்டிடத்தில் வியாபாரம் செய்தாலும் "கடை" எனத்தமிழில் பொருள் கொள்ளப்பட்டது., ஆனால் அங்காடி என்ற சொல் தமிழ் மட்டுமல்லாது தெலுகு, கனடா, துளு ஆகிய திராவிட மொழியிலும், மராத்தியிலும் உள்ளது.

கேரளாவில் உள்ள கொச்சினின் இயற்பெயர் கொச்சங்காடி அதாவது "சின்னக்கடை" அக்காலத்தில் கடல் வழி வாணிபம் அங்கு சிறிய அளவில் நடக்க ஆரம்பித்த போது வைத்த பெயர்.பின்னாளில் மருவி கொச்சின் ஆயிற்று. இப்பொழும் ,அங்கு அங்காடி என்ற பெயரில் சிறிய கிராமம் உள்ளது.

(ஹி...ஹி ...கொச்சின் குயினு)

கர்நாடகாவிலும் அங்காடி என்ற பெயரில் கிராமம் உள்ளதாம்.

மராத்தி தவிர மற்ற மொழிகளில் கடை என்ற பொருள் உள்ளது, மராத்தியில் மேல் அங்கி என்று பொருள். எனவே அங்காடி தமிழ் சொல் ஆக இருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது.

அநாதை(anaatha)

வடமொழி சொல், no help,no patron உதவிக்கு ,அல்லது கவனிக்க யாரும் இல்லாதவர் எனப்பொருள்.

நாதன் என்றால் தலைவன், அ-நாத என்றால் தலைவனாக யாரும் இல்லை, இதன் பொருள் ஒரு குடும்பம், குழுவில் இல்லாமல் தனித்து விடப்பட்டவர் என்பதாகும்.

எனவே தமிழில்,

திக்கற்றோர், தனி மனிதன், தனிக்கட்டை, உதவியற்றவன், உற்றார் இல்லாதவன், சொந்தமில்லாதவன், பற்றற்றவன், எனலாம்.

அகதி:

வட மொழி, நிலையில்லா எனப்பொருள்.

கதி- நிலை, பதம்,நேரம்,வேகம் எனப்பல பொருள் உண்டு.

அ என்றால் இல்லை, எனவே அகதி என்றால் நிலையான இடம்,அல்லது இடைப்பட்ட ஒரு நிலையில் இருப்பது.

இணையான தமிழ்ச்சொல்:

நாடோடி, புலம்பெயர்ந்தோர்,நிலையற்றவர் எனலாம்.

அதோகதி.

வட மொழிச்சொல், descend எனப்பொருள்.

அதோ என்றால் சரிதல், இறங்குதல்,கதி என்றால் நிலை,

இணையான தமிழ்ச்சொல்:

வீழ்தல், வீழ்ச்சியடைதல், இறங்குமுகம்,கீழான நிலையை அடைதல்.,நலிவுறுதல் எனலாம்.

வேலைப்போச்சுன்னா உன் கதி அதோகதி என சொல்வதுண்டு, அப்படியானால் இப்போது இருக்கும் நிலை-வசதி ,எல்லாம் இழக்க நேரிடும், கீழான ,எளிய வாழ்க்கைக்கு போக வேண்டி வரும் என சொல்வதாகும்.

நிர்க்கதி:

வடமொழி, நிர் என்றால் இல்லை, அழித்தல் , கதி- நிலை, எனவே கதியில்லை எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்,

வேறு வழியில்லை, நிலையில்லை, கையறு நிலை, பற்றற்ற நிலை,எங்கே போவது என்ன செய்வது அறியா நிலை என்பதை சுருக்கமாக "செய்வதறியா நிலை" எனலாம்.


அனுபவம்(anubhava)

வடமொழிச்சொல், experience எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

அனுபவசாலி- பயிற்சிப்பெற்றவர்,தேர்ச்சியுள்ளவர், பழக்கமுடையவர்,
பயிற்சி, அறிவு எனவும் பொருள் கொள்ளலாம்.

அனுமதி(anumathi)

வடமொழிச்சொல், permission எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:
அழைப்பு ,அழைத்தல்,நுழைவு,கடவு,உள்நுழை, என சொல்லலாம்.

அனுசரணை(aNusaranai)

வடமொழிச்சொல், adjust,acompany, எனப்பொருள்,

இணையான தமிழ்ச்சொல்,

அனுசரணை= இசைவு, அனுசரிப்பு- இசைந்து போதல், ஒற்றுப்போதல், சேர்ந்தியங்கல்.ஒருங்கிணைந்து செய்தல்,கூட்டாக இருத்தல்,ஒற்றுமையாக இருத்தல்.

அநியாயம்(anyaayena)

வடமொழிச்சொல் -illegal எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்,

சட்டத்திற்கு புறம்பான,முறையற்ற,பண்பற்ற, முறைகேடாக, வழமைக்கு மாறாக, என சொல்லலாம்.

அக்கிரமம்(akrama)

வட மொழிச்சொல்- illegal,unlawful எனப்பொருள் தரும் சொல்லே.

இணையான தமிழ்ச்சொல்,

முறைகேடு,சட்டத்திற்கு மாறாக,விருப்பமில்லா, விருப்பத்திற்கு மாறாக,வரம்பு மீறிய, வரிசையின்றி,ஒழுங்கின்றி, ஒழுங்குமீறிய என சொல்லலாம்.

கிரமம்- வரிசை, அக்ரமம்- வரிசையின்மை.

akrama-sakrama bill என கர்நாடக மாநிலத்தில் ,பெங்களூரு மாநகர வளர்ச்சி குழுமம் ஒரு சட்டம் இயற்றி எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது,அதாவது அனுமதியில்லாமல் கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் சட்டம்.

நீதி:

வடமொழி சொல்லே , ஜஸ்டீஸ் எனப்பொருள்.

நீதி,.நீதிமான் என்றெல்லாம் வட மொழியில் உண்டு.

தமிழில் , ஒழுக்கம், ஒழுகலாறு, மாண்பு,சட்டம்,வழக்கு,என சொல்லலாம்.

நீதி மன்றம்- வழக்காடு மன்றம்.

அட்வகேட்- வழக்குறைஞர்,

லாயர்- வழக்கறிஞர்.

மரியாதை:

மர்யாதா என்ற வட மொழி சொல்.

இணையான தமிழ்ச்சொல்:

கொள்கை, நேர்மை, மாண்பு, ஒழுக்கம் என சொல்லலாம்.

இதிகாச நாயகன் ராமனுக்கு மர்யாத புருஷோத்தம ராமா எனப்பட்டப்பெயர் உண்டு.

தெலுகில் மரியாத ராமண்ணா கதைகள் என , தெனாலி ராமன் போல கதாபாத்திரத்தின் அடிப்படையில் கதைகள் உள்ளது.


--------------------

அறிவுக்கடல் என்ற பதிவர் சில "மெட்ராஸ் பாஷை" சொற்களுக்கும் விளக்கம் கேட்டார், தெரிந்த வரையில் ஒரு விளக்கம் தருகிறேன்.

இஸ்த்துகினு:

இழுத்துக்கொண்டு என்ற பொருள், இழு என்பது தமிழ் சொல் தான் என்ற போதிலும், இசு என்பதும் தமிழ் தான். இசுத்தல் என்றாலும் இழுத்தல் என்றே பொருள் தரும்.

பிசு ,பிசுத்தல் ஒட்டுதல், பிசுக்குதல் என்றால்அழுத்தி வெளியேற்றல் என பொருள் தரும் தமிழ் சொற்கள் உள்ளதை கவனிக்கவும்.

ஜகா வாங்குதல்:

ஜகா என்ற வட மொழிச்சொல்லுக்கு விழிப்பு, என ஒரு பொருள் இருக்கிறது.

எனவே ஜகாவாகிட்டான் ,அதாவது விழித்துக்கொண்டான் என்ற பொருளில் சொல்லப்பட்டு பின்னர் மருவி இருக்கலாம்.

ஒருவரை ஒரு வேலைக்காக கூட வர சொல்லி அழைத்து கடைசி நேரத்தில் வரவில்லை என சொல்லும் போது பெரும்பாலும் திடீர்னு ஜகா வாங்கிட்டான் என சொல்வதுண்டு அல்லவா.

ஏன் எனில் இந்த வேலைக்காக இவன் கூட நாம போன நமக்கு என்னப்பயன் அல்லது பிரச்சினை வரலாம் என கடைசி நேரத்தில் ஒரு விழிப்பு வந்து விலகுவதனால் அப்படி சொல்வது பொருத்தமே.

ஜகச்ஜால கில்லாடி என சொல்வதும் இதனால் தான்,

ஜகா -விழிப்பு, ஜாலம் -வித்தை, அதாவது பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நம் முன்னால் ,நமக்கு தெரியாமல் செய்வது, மேஜீக் செய்வபவர்கள் நம் கண் முன்னால் நம்மை ஏமாற்றுவது போல.

இதனை வழக்கத்தில் எளிமையாக கண்கட்டு வித்தை என்பார்கள், விழிப்புடன் இருக்கும் போதே கண்ணை கட்டியது போல செய்வது...

ஆகா இப்பவே கண்ணக்கட்டுதே அவ்வ்வ் :-))

அப்படின்னும் சொல்லலாம்!

உஷார்:

உஷா- என்றால் வட மொழியில் விடியல், உஷாஸ் என்பவர் விடியலின் தேவதை, உஷத் காலம் என அதிகாலையை சொல்வது வழக்கம்.

உஷார் என்றால் விழித்துக்கொள், விழிப்பாக இரு எனப்பொருள்.

அக்காலத்தில் கோட்டையை காப்பவர்கள் சுற்றிலும் காவலுக்கு இருப்பார்கள் ,அவர்கள் தூங்காமல் இருக்க மணிக்கொரு ஒருத்தார் பாரா உஷார்னு சொல்லிக்கொண்டு ஒரு ரவுண்டு போவது வழக்கமாம். அதாவது காவல் காப்பவர்கள் விழிப்புடன் இருக்கணும், தூங்கிட்டு இருந்தாலும் முழித்துக்குவாங்க :-))

ராத்ரி- வடமொழி,
இரவு -தமிழ்
அர்த்ஹராத்ரி- நள்ளிரவு.

பேஜார் (bezar,bezaar):

கோவம்,டென்ஷன் ஆவது, பேஜார் பார்ட்டி என்றால் எதற்கெடுத்தாலும் கோவமாவது, பேஜாராகீது என்றால் டென்ஷனா இருக்கு என சொல்வது.

அதே சமயம் பேஜார் என்பதற்கு இன்னொரு பொருள் விலை மாது, பஜாரி என்று சொல்வது பேஜார் என்பதில் இருந்து வந்ததே.

நாஸ்த்தி:

ஆஸ்தி என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம், சொத்து ,அல்லது பொருள் இருப்பது, நாஸ்தி என்றால் எதுவும் இல்லை, இதில் இருந்து தான் நாஸ்த்திகம் -நாத்திகம் என்ற சொல் வந்தது ,அதாவது கடவுள் இல்லை என்பது.

நாஸ்தி பண்ணிடுவேன் என்றால் அழித்துவிடுவேன் என்பது.

கலீஜ் பார்ட்டி:

கலீஜ் என்ற அரபிய சொல்லுக்கு வளைகுடா, கடற்புறம் எனப்பொருள், சவுதி அரேபியாவில் கலீஜ் டைம்ஸ் என ஒரு செய்தித்தாள் உண்டு.அங்கு இருக்கும் ஊருக்கும் கல்லீஜ் எனப்பெயர்.

அப்போது முகலாயர்கள் இந்தியாவுக்கு நாடுப்பிடிக்க வந்தப்போது அவர்களை கலீஜ் நபர்கள் எனக்குறித்து இருக்கலாம்,மேலும் முரட்டுத்தனமானவர்களாக வேறு இருந்ததால் அப்படி இருப்பவர்களை எல்லாம் கலீஜ் என சொல்வது வழக்கமாக இருக்கலாம்.

இப்போது அழுக்கா, முரட்டுத்தனமா நடந்துக்கொள்பவர்களை கலீஜ் பார்ட்டி என சென்னை தமிழில் அழைக்கப்படுகிறார்கள்.

பாடாவதி பார்ட்டி:

பாடத்தெரியாத ஆள் என பொருள் அல்ல, படா- பெரிய, அவதி - தொல்லை, இம்சை,

பாடாவதி என்றால் பெரிய தொல்லையான ஆள் :-))

இன்னும் நிறைய சொற்கள் உண்டு படிப்படியாக பட்டியலிடுகிறேன்.

பின்னூட்டத்தில் உங்களுக்கு பொருள் தெரியவேண்டிய சொற்கள், குறிப்பிட்டால் முடிந்த வரையில் தேடி பொருள் கூறுவேன், மற்றும் தெரிந்த மாற்று சொற்களை கூறினால் அடுத்து வரும் இடுகையில் பயன்ப்படுத்திக்கொள்வேன்.நன்றி!

--------------
பின் குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி:

கூகிள், விக்கி,தமிழ் இணையப்பல்கலை, மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,அகரமுதலி,மேலும் பல இணைய தளங்கள்,நன்றி!
***************

Friday, September 07, 2012

கற்றது தமிழ்-2



தமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு.

இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்களோ தங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம், மேம்படுத்தப்படும். நன்றி!

பரவாயில்லை.

இச்சொல் பர்வா நஹி என்ற வட மொழி சொல்லில் இருந்து உருவானது.

பர்வா = கேர் (care), நஹி (nahi)=இல்லை,

பர்வா நஹி என்றால் ஐ டோண்ட் கேர்(i don't care) அல்லது நோ பிராப்ளம் (no problem, no mention)என சொல்வதாகும்.

அதனை அப்படியே தமிழ்ப்படுத்தி பரவாயில்லை என்றாக்கிவிட்டார்கள்.(தெலுங்கில் பர்வாலேது)

பரவாயில்லைக்கு இணைச்சொல் ,

கவலையில்லை,

பொருட்படுத்தவில்லை .

என சொல்லலாம்.

புத்தி.

புத்தி ( buddhi)என்பதும் வடமொழி இதற்கு ஞானம் என வடமொழியில் பொருள்,

buddhi-> buddha->buddhar ->.buddham

புத்தியுடையவர் புத்தர், அதாவது ஞானம் பெற்றவர், ஞானத்தினை உள்ளடக்கமாககொண்ட ஒன்று புத்தகம்.

புத்தியினை புகட்டும் செயல் போதித்தல் இதன் பெயர்ச்சொல் போதை , அதாவது ஞானம். போதி தருமர் , ஏழாம் அறிவெல்லாம் நினைவுக்கு வருமே.

புத்திக்கு இணையான தமிழ்ச்சொல் அறிவு,

ஞானம் என்பது அறிவு என்றாலும் அதில் உச்ச நிலை ஆகும் எனவே அதனை அறிவொளி எனலாம்.

எனவே

#புத்தி (knowledge)- அறிவு

#ஞானம் (wisdom)- அறிவொளி.

* முன்னர் தமிழக துவக்கப்பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்திற்கு அறிவொளி இயக்கம் என்றே பெயரிடப்பட்டிருந்தது, பின்னர் மத்திய அரசின் நிதியுடன் "சர்வ சிக்‌ஷா அபியான்" என மாற்றம் பெற்றது.

*அறிவொளி என்ற பெயரில் புகழ்மிக்க பட்டிமன்ற நடுவர் ஒருவரும் உள்ளார்.

#போதித்தல்(educate)- கற்பித்தல்

#புத்தகம்(book)- நூல்

---------------

ஐஸ் கிரீம்(ice cream):



ஐஸ்கிரீம் என்பது பால்,சர்க்கரை , மற்றும் சுவையூட்டி இவற்றினை காற்று ,நீர் கலந்த கூழ்ம (colloidal emulsion)வடிவில் உறைவித்து தயாரிப்பது ஆகும். எனவே இதனை ,

உறைகூழ் அல்லது

பனிக்கூழ் அல்லது

குளிர் கூழ் எனலாம்

முதன் முதலில் பனிக்கூழினை உண்ணக்கூடிய கூம்பு வடிவ ரொட்டியில் (cone icecream) வைத்து கொடுத்தது Charles Menches / Arnold Fomachou ஆவார்கள் ,அமெரிக்காவில் கி.பி 1904 இல் World's Fair in St. Louis. இது நிகழ்வுற்றது.
-------------

#சம்பவம் வடமொழி.

நிகழ்வு தமிழ்.

# மனிதன் வடமொழி ,

மனுஷ் , மனுஷன்,- மனிதன்

எனவே சரியான தமிழ் சொல்

மாந்தர்,மாந்தன்.

எடுத்துக்காட்டு:

தொட்டனைத் தூறு மணற்கேணி "மாந்தர்க்கு "
கற்றனைத் தூறும் அறிவு

# நபர் -அரபி,

தமிழ்ச்சொல் - ஆள், அல்லது ஒரு நபர்=ஒருவர்/ஒருவன், சில நபர்= சிலர்


#personality- ஆளுமை.

# பிரபலம் வடமொழி,

இணையான தமிழ்ச்சொல்.

புகழ்ப்பெற்றவர், புகழாளர்,

பிரபல பதிவர் என சொல்லாமல் புகழ்ப்பெற்ற பதிவர் எனலாம் :-))

#சந்தேகம் வடமொழி,

அய்யம் ,அய்யுறுவு என்பதே தமிழ்.

#சந்தோஷம் வடமொழி ,

இணையான தமிழ்ச்சொற்கள்:

மகிழ்ச்சி , குதூகலம்*,களிப்பு, உவகை, பெரு மகிழ்ச்சி எனில் பேருவுவகை எனலாம்,

*களிப்பு என்பதில் இருந்து குதூகளம் என வந்திருக்கலாம் என நினைக்கிறேன், சார்வாகன் கூறியப்படி குதூகலம் என மாற்றியுள்ளேன், சரியான சொல்லினை மீண்டும் சரிப்பார்க்க வேண்டும்.

# சந்திரன் வடமொழி,

நிலா, திங்கள், மதி என்பன தமிழ்.

# சூரியன் வடமொழி,

கதிரவன், பகலவன், ஆகியன தமிழ்.

# அம்மாவாசை ,வட மொழி , அமாவாஸ்ய என்பதில் இருந்து மருவிய சொல்,

நேரடியாக மொழிப்பெயர்த்தால் முதல் வளர் நிலவு நாள் என வரும், இதனை "இருட்மதி நாள்"(நிலவற்ற நாள்) என சொல்லலாம் என நினைக்கிறேன்.

*மதியிலி நாள், ஆக்கம் சார்வாகன்.(மதியிலி நாள் என்றால் முட்டாள் தினம்-ஏப்ரல்-1 என நினைத்துவிட்டால் என்ன செய்வது?)

மேலும் புதுப்பிறை நாள் எனவும் அழைக்கலாம் என நினைக்கிறேன்.

சரியான சொல்லினை தெரிந்தவர்கள் கூறலாம்.
---------------
வலைப்பதிவர் சொல்லகராதி:

பெரும்பாலோருக்கு வலைப்பதிவில் பயன்ப்படுத்தும் வலைப்பதிவு சார்ந்த இணையான தமிழ் சொற்கள் தெரிந்திருக்கும் ஆனாலும் மீண்டும் நினைவுறுத்த எனக்கு தெரிந்த சில சொற்களை தொகுத்துள்ளேன்.

Blog - வலைப்பூ, வலைப்பதிவு

web address-உரல்

link-சுட்டி, தொடுப்பு

comment- மறுமொழி,பின்னூட்டம்,

comment moderation-மறுமொழி மட்டுறுத்தல்

followers-பின் தொடர்பவர்கள்

follow up- பின் தொடர

up load- தரவேற்றம்.

down load-தரவிறக்கம்.

search engine-தேடு பொறி.

mouse-எலிக்குட்டி ,சுட்டுவான்.

keyboard-தட்டச்சுப்பலகை.

hard disk-வன் தட்டு/வட்டு, இறுவட்டு.

dvd-குறுவட்டு.

computer monitor- காட்சி திரை,கணினி திரை.

central processing unit(cpu)- நடுவண் செயல் அலகு,நடுவண் இயங்கலகு,செயலி.

தொடரும்...
----------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், தமிழ் விக்‌ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகர முதலி தளங்கள்,நன்றி!
-------------


Saturday, September 01, 2012

கற்றது தமிழ்-1

(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ)

நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பயன் படுத்தி வந்தாலும் ,பலரும் அதனை கருத்தில் கொள்ளாமல் மேலோட்டமாக படித்து செல்கிறார்கள் ,அப்படி சென்றாலும் பரவாயில்லை ஒரே மட்டையடியாக பொதுவாக தமிழில் அறிவியல் சொற்கள் இல்லை, மேலும் பல வடமொழிச்சொற்கள் தான் இருக்கு ,எனவே தமிழின் மொழி வளம் குறைவு என மட்டையடிக்கிறார்கள் , தமிழில் சுமார் ஏழு லட்சத்திற்கும் மேல் தனித்தமிழ் சொற்கள் உண்டு(வைரமுத்தே சொல்லிக்கீறார்), மேலும் இன்றைய உலகவழக்கிற்கு தேவையான அறிவியல் சொற்களையும் உருவாக்கிக்கொள்ளலாம், அதற்குத்தமிழில் இடம் உண்டு, தமிழ் ஒரு நெகிழ்வான மொழியாகும்.எனவே அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை பட்டியலிட்டு வரலாம் என நினைக்கிறேன்.

அல்லக்கை:

இது ஒரு தெள்ளுத்தமிழ் சொல்லாகும்.

அல்ல= இல்லை ,+கை ,அதாவது இல்லாத கை, ஒரு பெரும்புள்ளிக்கு அவரது வழக்கமான கரம் போக இல்லாத மூன்றாவது கரமாக செயல்ப்படும் ஒருவரை குறிப்பது.

வழக்கமாக ஒரு முக்கியமானவரின் நெருங்கியவரை இவரு அவரோட ரைட் ஹேண்ட் (right hand)என ஆங்கிலத்தில் சொல்வதுண்டல்லவா.

மேலும் அல்ல என்பதற்கு தீயவை என்றும் பொருள் உண்டு.

"அல்லவை நீக்கி நல்லவை நாட வேண்டும்"

பெரும்பாலும் அல்லக்கையாக இருக்கும் மனிதர் ,தலைவரு சொன்னாருன்னு ஏகப்பட்ட ஆட்டம் ஆடுவார்,பலருக்கும் கெடுதல் செய்வது வழக்கம்.

அல்லக்கை என்றால் தீயவர், இன்னொருக்கு அடிப்பொடி எனலாம்.

அதிகாரி:

இது வடமொழியாகும்,

அதி= கூடுதலாக , உயர்வாக,

காரி = செய்பவர் , காரியம் செயல்.

அதிகாரி என்றால் ஒரு செயலை செய்பவர், வேலை செய்பவர்.

இணையான தமிழ்ச்சொல் அலுவலர்.

ஆணி:

இதுவும் வடமொழியே, இரும்பு முளை என்று பொருள்.

ஆட்டோ ரிக்‌ஷா (auto riksha):

ஆங்கில,ஜப்பானிய கலவை சொல்.

ஆட்டோ= தானியங்கி

ரிக்ஷா =கையால் இழுப்பது.

எனவே தமிழில் அப்படியே மொழிப்பெயர்க்காமல்,

ஆட்டோ ரிக்‌ஷா =தானியங்கி மூவுருளி.

மூன்று சக்கரங்களை கொண்ட மோட்டார் வாகனம் எனப்பொருள்.

Bicycle:

இதற்கு தமிழில் மிதிவண்டி என்பார்கள், இன்னொருப்பெயரும் இருக்கிறது "ஈர் உருளி" இரண்டு சக்கரங்களை கொண்ட வண்டி.


கிரேன்(crane):

ஓந்தி= உயரத்தூக்குதல், உந்துதல் என்றால் முன்னால் தள்ளுதல் ,ஓந்துதல் என்றால் உயரத்தில் தள்ளுவது,தூக்குவது.

ஆகாயவிமானம்(aeroplane):

வடமொழி, இதற்கு தமிழில் வானூர்தி ,இல்லை எனில் பறக்கும் எந்திரம் என சொல்லலாம். ஏன் எனில் ரைட் சகோதரர்கள் முதலில் கண்டுப்பிடித்த போது "ஃப்ளையிங் மெஷின்" (Flying machine)என்று தான் பெயர் வைத்தார்கள்.

அத்தகைய வானுர்தியில் இரண்டு அடுக்கில் சமதளமான இறக்கைகள் இருக்கும் இதனால் அதனை "பை பிளேன்" (bi-plane)என்று அழைத்தார்கள், ஏர்-ஏரோ என்றால் காற்று எனவே ஏரோ பிளேன் ஆயிற்று.

ஹெலிகாப்டர்(helicopter);

இணையான தமிழ் சொல்:
உலங்கு வானூர்தி:

உலங்கு = சுழலுதல் , ஹெலிஹாப்டரில் மேல் உள்ள விசிறிகள் சுழன்று அதன் மூலம் பறப்பதால் உலங்கூர்தி.

முதலில் ஹெலிஹாப்டருக்கு "ஏர்ஸ்க்ரு" (airscrew)என்று பெயர் வைத்தார்கள், திருகாணிப்போல விசிறிகள் சுழல்வதால் ,பின்னர் ஹெலிகாப்டர் ஆயிற்று. ஹெலி (heli)என்றாலும் சுழலுவது தான்.


திசைகளும் காற்றும்:

கிழக்கு- கொண்டல் காற்று

மேற்கு: மாருதம்*

தெற்கு :தென்றல்

வடக்கு: வாடைக்காற்று.

*மாருதம் , இதில் இருந்து மாருதி வருகிறது அப்படியானால் வட மொழி என தோன்றலாம், ஆனால் தமிழிலிருந்தும் பல சொற்கள் வடமொழிக்கு சென்றுள்ளது, உதாரணமாக கூலி என்ற சொல், திருக்குறளிலும் உண்டு.

காளிதாசர் மேகதூத் என்ற காவியம் எழுதியுள்ளார், இதனை தமிழில் மேகதூது எனலாம், மேகம் வட மொழி என்றாலும், தூது வட மொழி என சொல்ல முடியாது ,தூது என்றே திருக்குறளில் ஒரு அதிகாரம் உள்ளது, மேலும் சங்க இலக்கியங்களில் தலைவி தலைவனுக்கு தூது விடுவதாக நிறையப்பாடல்கள் இருக்கிறது. எனவே தூது தமிழில் இருந்து வடமொழிக்கு சென்று இருக்கலாம்.

மேகம்;

தமிழ் சொற்கள்: கொண்டல் ,முகில்,மாரி, மஞ்சு ஆகியவை.

காக்கா:

இதுவும் வடமொழியே, கா என்றால் சமஸ்கிருதத்தில் யார், காக்கா கரையும் போது கா ..க்கா என ஒலிப்பது யார்..யார் என சமஸ்கிருதத்தில் கேட்பது போல இருப்பதால் காக்கா என பெயர் வைத்துவிட்டார்கள்.

தமிழ் இணைச்சொல்: முட்டம்

நாகர்கோவிலில் முட்டம் என்ற ஊர் உள்ளது.

ஶ்ரீமுஷ்ணம் என்ற ஊரினை தமிழில் திருமுட்டம் என்பார்கள், அவ்வூரில் ஒரு காக்கா மோட்சம் அடைந்தது என்பது தலபுராணம்.

மேலும் வேலூர் அருகே குரங்கணிமுட்டம் என ஊர் உள்ளது , குரங்கு ,அணில்,முட்டம்(காக்கா) ஆகியவை மோட்சம் அடைந்ததாக தலபுராணம், எனவே மூன்றின் பெயரை சேர்த்து ஊருக்கு குரங்கணிமுட்டம் என பெயர் வந்துள்ளது.

தொடரும்...
---------

பின் குறிப்பு:

#இங்கு சில சொற்களை நானே உருவாக்கியும் ,மேலும் முன்னர் படித்தவற்றின் நினைவில் இருந்தும், தமிழ் விக்‌ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகரமுதலி ஆகியவற்றின் உதவியுடனும் தொகுத்துள்ளேன், பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி!

#இப்பதிவிற்கு கோவியாரின் "பந்தயம்" குறித்தான பதிவும் ஒரு தூண்டுகோல், வழக்கமான பந்தயம் என்ற சொல்லுக்கே ஆராயும் நிலையில் தமிழ் சொற்களை பொருளுணர்ந்து பயன்படுத்தும் நிலை அருகி வருவதாக தோன்றியதால் ,அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை தனியே பட்டியலிட்டால் என்ன என தோன்றியது.

---------